Connect with us

Uncategorized

சுருக்கப்படும் ஜனநாயகம்

Published

on

ஜனநாயகத்தில் குடிமக்கள் தங்கள் விரும்புகின்ற ஓர் அரசை தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது. அப்படி தேர்ந்தெடுக்கப்படும் அரசானது, அரசியலமைப்பின் அடிப்படை நெறிகளான சுதந்திரம், சகோதரத்துவம்,நீதி போன்றவைகளை உயர்த்திப்பிடிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக ஆளுகின்ற கட்சி, இத்தைய நெறிமுறைகளுக்கு விரோதமாக சட்டம் இயற்ற முடியாது. இதற்கு சமீபத்திய உதாரணம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கப்படும் என்ற அறிவிப்பாகும். பாகுபாடான இந்த சட்டத்தை எதிர்த்து 2021 ஆண்டு முழுமையும், இந்தியாவெங்கும் போராட்டம் நடந்தது.

தற்போதைய பாஜக அரசானது இரண்டு முறை அதிகாரத்திற்கு தேந்தெடுக்கப்பட்டாலும், அரசியல் அமைப்பு நெறிமுறைகளை கடைபிடிப்பதில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக அதன் நடவடிக்கைகள் அதை தெரிவிக்கின்றன.

அவர்கள் நடவடிக்கைகள், எல்லாவிதமான மாற்றுக்குரலையும் அமைதியாக்கி விட்டன. ஊடகங்களை ஒட்டுமொத்தமாக தனக்கானதாக்கி விட்டனர். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுகின்றனர். அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை போன்ற அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டியோ, ஆசைகாட்டியோ, பெருந்தொகை கொடுத்தோ பாஜக தனது கட்சிக்கு இழுத்து, அதன் மூலமாக எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மாற்றுகின்றனர். பாஜகவிற்கு எதிரான இத்தகைய குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறையோ, மத்திய புலனாய்வுத் துறையோ விசாரிப்பதில்லை.

நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம், தலைமை கணக்குத் தணிக்கையாளர் போன்ற சுயேச்சையான அரசமைப்பு நிறுவனங்கள் மீது தாக்கம் செலுத்தி, அவர்கள் செய்யும் தவறுகள் வெளியே வராமல் பார்த்துக்கொள்கிறார்கள். பாஜக அரசாங்கம் கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்குகள் காலவரையறையின்றி கிடப்பில் இருக்கின்றன. தேர்தல் பத்திர வழக்கில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் பாஜகவிற்கு எதிராக வழங்கியுள்ள தீர்ப்பு பாராட்டப்படுகிறது. பல வழக்குகளில் இதற்கு மட்டும்தான் தீர்ப்பு வந்துள்ளது. பலவிதமான பொருளாதார நடவடிக்கைகள், கேள்வி ஏதுமின்றி மறைக்கப்படுகின்றன. ராம ஜென்ம பூமி வழக்கு, குஜராத் படுகொலை தொடர்பான வழக்குகள், அரசியல் சாசன 370 பிரிவு வழக்கு, நீதிபதி லோயா மரணம், ரபேல் விமான ஊழல் வழக்கு போன்றவைகளில் அரசாங்கத்தின் நிலைபாடுகளை உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது.

உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்புகளுக்கு மாறாக, அவர்களுக்கு ஏற்றபடி சட்டங்களை போட்டுவருகின்றனர். அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளாத அலுவலர்களை வெளியேற்றுகிறார்கள்; வேட்டையாடுகிறார்கள்.

அரசாங்க புள்ளிவிபரங்கள் வெளிவராதால், அவர்களின் மிகையான பரப்புரைகளை எதிர்கொள்ள முடிவதில்லை. நிதி ஆயோகின் தலைவர் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல்இன்றியும், “இந்தியாவில் வறுமை 5 % குறைந்துள்ளது” என்கிறார். இத்தகைய காரணங்களால் பாஜகாவால் ஆளப்படும் ஒன்றிய அரசினாலும், பாஜக, ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களாலும் இந்தியாவில் ஜனநாயகம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

புது தில்லியில், மார்ச்சு 16,17 தேதிகளில் நடைபெறும் ஏஐடியுசியின் நிர்வாகக்குழுவானது, இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால், வரவிருக்கிற தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Uncategorized

முன்கூட்டியே செலுத்தும் சீர்மிகு மீட்டர் கொள்கையை கைவிடு

Published

on

இந்தியா முழுவதும் 25 கோடி சீர்மிகு மீட்டர் (smart meter) நிறுவும் கொள்கை அமலாக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒன்றிய அரசு 60 சத நிதியையும், மாநில அரசுகள் மீதித்தொகையையும், மின்சாரத்தை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு (Discoms) தர வேண்டும். பெருநிறுவனங்களின் கோரிக்கைப்படி சீர்மிகு மீட்டர்கள் பொறுத்தும் திட்டம் அமலாக்கப்படுகிறது. இதனால் மின்சாரத்துறையில், இலாபம் வரும் பகுதியை தனியாருக்கு அளிக்க உள்ளனர்.

தனியார் பெருநிறுவனங்கள் மின் உற்பத்தி, பகிர்மானம், விநியோகம் என அனைத்தையும் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர விரும்புகின்றனர். மின்சாரத்திற்கு தரப்படும் எல்லாவித மானியத்தையும் நிறுத்த விரும்புகின்றனர். சீர்மிகு மீட்டர் அமலானால், முன்னதாகவே பணத்தை கட்டினால்தான் மின்சாரம் கடைக்கும். நுகர்வோர், அரசாங்கத்தின் பணத்தைக்கொண்டு, தங்கள் இலாபத்தை அதிகரித்துக் கொள்வதே முதலாளிகளின் நோக்கமாகும். மின் கட்டணம் வருடம்தோறும் நிர்ணயிக்கப்படும். இதனால் மின்சாரம் அடிப்படை தேவை என்ற நிலையில் இருந்து மாறி, இலாப நோக்கிலேயே செயல்படும். தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். தமிழ்நாட்டில் 20,000 தொழிலாளர்களும், மகாராஷ்டிரா வில் 30,000 தொழிலாளர்களும் வேலை இழப்பர். சீர்மிகு மீட்டர் திட்டத்தை, மின்சார தொழிலாளர்கள், நுகர்வோர், பொதுமக்களோடு இணைந்து எதிர்த்து வருகிறார்கள்.

மக்கள் விரோத, மாநில அரசுகளுக்கு விரோதமான, பெரு நிறுவனங்கள் பலன் அடையும் வகையில் 2022 ல் மின் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. மின் விநியோகத்தில் பல வகைகளில் தனியாருக்கு உரிமம் வழங்குவதற்கு இது வழிவகை செய்தது. இதனால் மின்சாரம் தனியார்மயமாகும். தொழிலாளர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பு காரணமாக அது சட்டமாகவில்லை. இதிலுள்ள பிரிவுகள் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளன. மின்சாரம் விநியோகம் செய்பவர்கள் இதில் முதலீடு ஏதும் செய்யப்போவதில்லை.

நுகர்வோருக்கு விரோதமான, தேச விரோதமான, மாநில உரிமைகளைப் பறிக்கும் காட்டுமிராண்டி மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். தனியார்மயத்தை எதிர்த்து போராடும் 15 இலடசம் மின் தொழிலாளர்களுக்கு ஏஐடியுசி தனது ஆதரவை நல்குகிறது.

Continue Reading

Uncategorized

Published

on

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை தொடர்ந்து எதிர்க்கிறோம்

குடியுரிமை திருத்தச் சட்டம்(CAA), தேசிய மக்கள் தொகைப் பதிவேடு(NPR), தேசிய குடிமக்கள் பதிவேடு(NRC) ஆகியவற்றை அமலாக்க, பாஜக செய்யும் அனைத்து முயற்சிகளை எதிர்க்க ஏஐடியுசி உறுதி கொள்கிறது. மார்ச்சு 2024 முதல் குடியுரிமை திருத்த சட்டம் 2019 அமலுக்கு வந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை இசுலாமிய சிறுபான்மையினரை மட்டும் ஒடுக்குவதற்காக கொண்டுவரப்படவில்லை. இதனால் இந்தியா முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான வீடற்றவர்களும் பாதிப்பு அடைவர். வீடற்ற 99 % மக்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை. இவர்கள் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஆவார்கள். வீடற்ற 30 % மக்களுக்கு எந்தவித அடையாளச் சான்றும் இல்லை என்று சொல்லப்படுகிறது. கிராமப்புற நெருக்கடியால் இடம்பெயரும் பழங்குடி, நாடோடி, புலம்பெயர்ந்த மக்களிடம் தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகளுக்கு தருவதற்கு தேவையான ஆவணம் ஏதும் இருப்பதில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு முன்னோட்டமாக செய்யப்படுவதாகும். நிரூபிக்கப்படும் வரை இந்தியாவில் வாழ்பவர்கள் அனைவரும் சட்டவிரோத குடியேறிகள் என்ற எண்ணத்தில் பாஜக இந்த நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இது அரசியலமைப்பின் மீதும், 1955 ஆம் ஆண்டின் இந்திய குடியுரிமைச் சட்டத்தின் மீதும் தொடுக்கப்படும் தாக்குதலாகும். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகள் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ளன; இதன் வழியாக மக்கள்தொகை விவரங்களையும், உயிரியளவியல் (Bio metric) விவரங்களையும் பாஜக சேகரித்து கண்காணிப்பிற்குள் வைத்துக்கொள்ள இருக்கிறது.

பாஜக ஆட்சியில் இருந்த போது 2003 ஆம் ஆண்டில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஒவ்வொரு குடிமகனும் தன்னை பதிவு செய்துகொள்ள வேண்டும்; தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்ற சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டது. இதனால் மக்கள் தொகை பதிவேடு உருவாக சட்டப்பூர்வமான ஏற்பாடு வந்தது; இது மக்கள் தொகை கணக்கீட்டோடும், தேசிய குடிமக்கள் பதிவேட்டோடும் இணைக்கப்பட்டது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு நாடு முழுவதும் வந்த எதிர்ப்பின் காரணமாக, தேசிய மக்கள் தொகை பதிவேட்டையும், குடிமக்கள் பதிவேட்டையும் நிறுத்தி வைத்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் இசுலாமிய சிறுபான்மையினருக்கு குடியுரிமையை மறுக்கிறது; அதே சமயம் முஸ்லிம் அல்லாத சட்டவிரோத குடியேறிகளை பாதுகாக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு காட்டுமிராண்டித்தனமானவை; அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவையாகும்.

மதம், சாதி, இனம், வகுப்பு அடிப்படையில் மக்களை நசுக்கும் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் ஏஐடியுசி எதிர்க்கிறது.

Continue Reading

Uncategorized

தொழிற்சங்கங்களை வில்லன்களாக பார்க்காதீர்!

Published

on

சில நாட்களுக்கு முன்னர் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்த தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் கைது செய்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களை நடுக்கடலில் தாக்கி கைது செய்யும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்கிறது. ஒன்றிய அரசு உரிய தீர்வு காண தயாராக இல்லை.
மற்றொருபுறம் கடந்த சில ஆண்டுகளாக மீனவர்களுக்கு மீன்பாடு இல்லை. மீன்களுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் பல மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அப்படி இரான் நாட்டிற்கு ராமநாதபுரம் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட இந்தியாவிலிருந்து ஒப்பந்த தொழிலாளர்களாக இரானுக்கு சென்றனர்.

மோசமான வேலை சூழல் காரணமாக உரிமையாளரின் படகை பயன்படுத்தி .இரான் நாட்டிலிருந்து தப்பி கடல் வழியாக விசைப்படகு மூலமாகவே 3,500 கிமீ தூரத்தை கடந்து 14 நாட்கள் கடலில் பயணித்து தப்பி வந்து சேர்ந்தனர். தப்பமுடியாமல் பலப் பல தொழிலாளர்கள் என்ன பாடு படுகிறார்களோ!

நான்கு தலைமுறையாக வேலை பார்த்துவந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் 700 குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வாழ்ந்த வீடு, வேலைபார்த்த நிலம், படித்த பள்ளி, முன்னோர்களின் கல்லறைகள், சக தொழிலாளர்களுடனான உறவு என எல்லாவற்றின் மீதும் ஒரு விலக்க முடியாத திரை விழுந்து, சொந்த நாட்டில் அறிவிக்கப்படாத அகதிகளாக்கப் பட்டுள்ளனர்.

வேலை தேடி குவைத் நாட்டுக்கு சென்ற தொழிலாளர்கள் 50 பேர் தீ விபத்தில் கரிக்கட்டைகளாகி பெட்டியில் அடைத்து சடலங்களாக வந்தனர். சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அரசு மது பானக்கடைகளில் சமூக விரோதிகள் தாக்குதலால் உயிரிழப்புகளும், கொடும் காயங்களும் தொடர்கதையாகும். இது போன்ற எண்ணற்ற இன்னல்களுடன் தொழிலாளர்கள் வாழ்வு!
கள்ளக்குறிச்சியில் 120 ரூபாய் கொடுத்து அரசு மதுபானக் கடையில் மது வாங்க முடியாத தொழிலாளர்கள் கள்ள சந்தை மதுவை பயன்படுத்தி வந்ததால் 58 பேர் உயிரழந்து அவர்கள் குடும்பம் நிர்க்கதியாக்கப்பட்டுள்ள நிலையும் தொடர்கதை!
இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையின்மையின் காரணமாக, ஏதோ வேலைக்காக இடம்பெயர்வது அதிகரித்துள்ளது. உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் பாதுகாப்பற்ற வேலை, உத்தரவாதமில்லாத வாழ்க்கை என்னும் நிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் தொழிற்சங்கங்களை வில்லன்களாக பார்க்க வேண்டாம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை பிரதிபலிக்கட்டும் என்று ஒன்றிய நிதியமைச்சரிடம் மத்திய தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.
வளர்ச்சியின் நாயகர்களான தொழிலாளர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு ஒன்றிய, மாநில அரசுகள் யாருக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றன என்று இந்திய தொழிலாளி வர்க்கம் உரத்துக் கேட்கட்டும்.

= ம.இராதாகிருஷ்ணன்

Continue Reading

Trending

Copyright © 2022 Tamilnadu AITUC. Developed by : Marxist Info Systems, Coimbatore.