ஒவ்வொரு ஆண்டும் இந்திய தொழிலாளர் மாநாட்டை நடத்துவதை உறுதி செய்தல்
பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறுதல். நூற்றாண்டு காலமாக தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை இந்தச் சட்டம் பறிக்கிறது. இரத்து செய்யப்பட்ட தொழிலாளர் சட்டங்களை மீண்டும் கொடுவருதல். தொழிற்சங்கங்களோடு பேசி தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை மேம்படுத்தல்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும், டீசல், பெட்ரோல், எரிவாயு போன்றவைகளின் விலைகளையும் கட்டுப்படுத்துதல், பொது விநியோக முறையை வலுப்படுத்துதல்
அனைத்து திட்ட பணியாளர்களுக்கும் தொழிலாளர் என்ற நிலையை வழங்கி, அவர்களது பணிகளை நிரந்தரப்படுத்துதல்.
ஓர் ஆண்டுக்கு குறைந்த பட்சம் 200 வேலைநாட்களை உறுதி செய்தல், நாளொன்றுக்கு ரூ. 600 வீதம் ஊதியத்தை நிர்ணயம் செயதல். நகர்புறங்களுக்கும் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துதல்.
அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியம் ரூ. 600 என நிர்ணயம் செயதல்
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மத்திய தொழிற்சங்கங்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் அவைகளின் உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப பல்வேறு இருதரப்பு, முத்தரப்பு குழுக்களிலும், தூதுக் குழுக்கள் உள்ளிட்ட ஆலோசனை குழுக்களிலும் இடம் தருதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு உரிய கூட்டு ஆலோசனைக் குழுவை (JCM) முறையாக செயல்படுத்துதல், ஊழியர்களோடு குறிப்பிட்ட காலகட்டத்தில் பேசுதல், அங்கு எட்டப்படும் முடிவுகளை அமலாக்குதல், கூட்டு ஆலோசனைக் குழுவின் கீழ் சமரசத்தீர்ப்புகளை (arbitration awards) உரிய காலத்தில் பெறுதல்.
படைக்கல தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றும் முடிவை திரும்பப் பெற்று, அவைகளை மீண்டும் அரசுத்துறையின் இயங்கும் ஆலைகளாக்குதல், கேந்திரமான இந்த ஆலைகளை சிறப்பாக செயல்படுத்த தொழிற்சங்கங்கள் தரும் மாற்று ஆலோசனைகளை பரிசீலித்தல்.
இரயில்வே, பாதுகாப்பு, பிஎஸ்என்எல், வங்கிகள், பொதுக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, நிலக்கரி, சுரங்கங்கள் மருந்துகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சாரம், எஃகு, எண்ணெய், கனரக பொறியியல், கட்டுமானம் போன்றவைகளை தனியார்மயமாக்குவதை திரும்பப்பெறுதல். பொதுத்துறை பங்குகளை விற்பதை நிறுத்துதல்.
ஒன்றிய அரசிலும் அதன் நிறுவனங்களிலும் காலியாக இருக்கும் 12 இலட்சம் இடங்களையும், பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக இருக்கும் 5 இலட்சம் இடங்களையும் நிரப்புதல்.
உத்திரவாதம் இல்லாத புது ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்று, உறுதியளிக்கப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருதல்.
அனைவருக்கும் ஓய்வூதியம்; தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் – 95 ன்( EPS- 95) கீழ் குறைந்த பட்ச ரூ.9000.
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் எட்டாவது ஊதியக் குழுவை அமைத்தல்.
குறைந்தது ஒருமாத ஊதியத்தை போனசாக வழங்குதல், வருங்கால வைப்புநிதி, இஎஸ்ஐ – க்கு பங்களிப்பு செய்ய உச்சவரம்பை நீக்குதல்.
இராணுவத்தில் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள அக்னிவீர் திட்டத்தை திரும்பப் பெற்று, மீண்டும் நிரந்தர நியமனங்களை கொண்டுவருதல், ஏற்கனவே அக்னிவீர் திட்டத்தில் உள்ளவர்களை சகல பலன்களோடும் இராணுவத்தில் நிரந்தமாக ஏற்றுக் கொள்ளுதல்.
மத்திய அரசு ஊழியர்களின் சேவை தொடர்பாக தொடுக்கப்படும் வழக்குகளை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும். உயர்நீதி மன்றமோ, உச்சநீதிமன்றமோ குறிப்பிட்ட வழக்குகளில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தபிறகு, அவை சட்டமாகும். அதேபோல நிலமையில் உள்ள மற்ற ஊழியர்களுக்கும் அந்த பலன்களை விரிவுபடுத்த வேண்டும்.
இராணுவத்திலும், கடலோர காவல்படையிலும் வேலைவாய்ப்பிலும், பதவி உயர்விலும் பாலின சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும்.
தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும் மருத்துவ சிகிச்சை கட்டணத்தை ஒழுங்கு படுத்த ஒரு அதிகார அமைப்பை உருவாக்க வேண்டும். ஏற்கனவே உச்சநீதிமன்றமானது, CGHS விகிதப்படி சிகிச்சை கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.
பாராளுமன்ற குழு பரிந்துரைத்தபடி, நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் CGHS நல மையங்களை அமைக்க வேண்டும்.
எல்லா அரசுப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நவீன கல்வித் தேவைக்கு ஏற்ப வலுப்படுத்தி மேம்படுத்த வேண்டும்.
நாட்டில் உள்ள எல்லா அரசு மருத்துவமனைகளையும், நவீன மருத்துவ, பன்சிறப்பு சிகிச்சைக்கு ஏற்ப வலுப்படுத்தி மேம்படுத்த வேண்டும்.
ஆண்டுக்கு பத்து இலட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள் வருமானவரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு வருமானவரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கும், மூத்த பெண்களுக்கும் மீண்டும் சலுகைகளை தர வேண்டும்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அனுமதிக்கப்படும் முறையை பரிசீலிக்க வேண்டும். அதில் இடஒதுக்கீடு இருக்க வேண்டும். கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளோடு இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
படைக்கலன்களில் பணிபுரிந்த ஊழியர்களின் பிள்ளைகளுக்கு, அவைகள் கார்ப்பரேஷன்களாக மாற்றப்பட்ட பிறகு பள்ளி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்களை மீண்டும் பள்ளிகளில் அனுமதிக்க வேண்டும்.
தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக்க வேண்டும். அதுவரை ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஊதியம் வழங்க வேண்டும். வெளிச்சந்தையில் ஆள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் திரும்பப்பெறுக – தொழிற்சங்கங்களின் கூட்டறிக்கை
ஜூலை ஒன்றாம் நாள் முதல் அமலாக்கப்பட்டுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது.
இந்தச் சட்டங்கள் முறையான விவாதங்கள் இல்லாமல், பாராளுமன்ற குழு கொடுத்துள்ள பரிந்துரைகளைக் கூட கண்டுகொள்ளாமல், நகல் கொள்கையை பொதுவெளியில் வைக்காமல் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
வெள்ளையர் கால சட்டங்களுக்குப் பதிலாக இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று சொல்லப்படுவது தவறாகும். ஏனெனில் பழைய சட்டங்களின் அனைத்துப் பிரிவுகளும் புதிய சட்டங்களில் உள்ளன; இன்னும் சொல்லப்போனானால் சில பிரிவுகள் கடுமையாகவும் உள்ளன. உதாரணமாக இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 பிரிவு புதிய சட்டத்திலும் உள்ளது. அதற்கு மூன்று வருட சிறைத்தண்டனை என்பது ஏழு ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
மக்கள் எப்படி ஒன்றுகூடினாலும், தலைவர்கள் ஒன்றுகூடினாலும் அவர்களை தீவிரவாதிகள் என்று சொல்ல முடியும். அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் இந்தப் பிரிவின்கீழ் கொண்டுவர முடியும்.
இவற்றின் பல பிரிவுகளின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. இது குழப்பத்தை உருவாக்குவதோடு, வழக்குகள் தேங்குவதை பெருமளவில் வருங்காலங்களில் அதிகரிக்கும். தற்போது கீழ்மட்ட நீதிமன்றங்களில் 6.4 கோடி வழக்குகள் சமாளிக்க முடியாத அளவுக்கு தேங்கியுள்ளன.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உருவான தீர்ப்பு வழிச்சட்டங்கள் (case law) புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்கத்தினால், இனி பயனற்றுப் போகும். இதனால் வழக்காடிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என அனைவரும் அரசியலமைப்பு முடிவுகளுக்கு வர போராட வேண்டி இருக்கும்.
காவல் ஆய்வாளர்களுக்கு முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்ய முழு அதிகாரமும்- அதாவது பதிவு செய்யலாமா என்ற விருப்பமும் – கொடுக்கப்பட்டுள்ளது. பழைய சட்டத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்.
போலிஸ் காவலில் இருக்கும் காலமானது 15நாட்களில் இருந்து 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான வழியில் போராடுபவர்கள் மீதும், முற்றுகையிடும் (gherao) தொழிலாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இது ஆட்சிசெய்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடக்குமுறையை கையாள விரும்பும் காவல் அரசிற்கு (police raj) கட்டியம் சொல்வது போல உள்ளது.
தற்போது நடைமுறையில், நீதி வழங்குவதைக் குறிக்கும் சொல்லான “நீதி வழங்கும் நீதிமன்றம்” (Court of Justice) என்ற வரையறையானது “நீதிமன்றம்”(court) என்று மாற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே வாகன ஓட்டிகள் ‘மோதிவிட்டு ஓடிவிடும்’ (hit and run) வழக்குகளை எதிர்த்து போராடியதால் பின்னடைவு ஏற்பட்டது. அரசாங்கம் அந்தப் பிரிவுகளை அமலாக்கமாட்டோம் என கூறியது; ஆனால் அந்தப் பிரிவுகளை அவர்கள் நீக்கவில்லை.
இந்தி பேசாத மக்கள் இந்தியை திணிப்பதை எதிர்த்துள்ளனர். அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 348 – ம், அரசு மொழிச் சட்டமும் பாராளுமன்றம், சட்டமன்றம் இயற்றுபவை அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், 2016 ல் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் போன்றதொரு முட்டாள்தனமான, அதைவிட அபாயகரமான நடவடிக்கையாகும். நவ தாராளவாத கொள்கைகளுக்கு இசைவான, மக்களின் உரிமைகள் மீது தாக்குதலைத் தொடுப்பதாகும்.
மத்திய தொழிற்சங்கங்கள், சுயேச்சையான சமரமேளனங்கள், சங்கங்களின் பொது மேடையானது, புதிய குற்றவியல் சட்டங்களை நீக்கிவிட்டு பழைய சட்டங்களே தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறது. புதிய மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டி இருப்பின் அதனை ஏற்றுக் கொண்டு அமலாக்குவதற்கு முன்பு பொதுவெளியில் விவாதிக்க வேண்டும்.
INTUC AITUC HMS CITU AIUTUC TUCC SEWA AICCTU LPF UTUC
குவைத் நாட்டில், தொழிலாளர் முகாமில் நடந்த தீ விபத்தில் இறந்துபோனவர்களுக்காக ஏஐடியுசியின் செயற்குழு தனது அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறையும், குவைத் நாட்டின் தூதரகமும் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வெளிநாடாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலமை குறித்து கவனம் கொள்வது அவசியமானதாகும். தில்லியிலும் மற்ற இடங்களிலும் ஏற்பட்ட இத்தகைய தீ விபத்துகள், தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற பணிச்சூழலில் இருப்பதை கவலைகொள்ள வைக்கின்றன.
“எளிதாக தொழில் செய்வதற்காக” தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் துறை ஆய்வுகளை நீக்குவதைப் பற்றி ஏஐடியுசி தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையின்மையின் காரணமாக, ஏதோ வேலைக்காக இடம்பெயர்வது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பணியிடங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் முனைப்பான நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்; அவர்களை நிலையான வெளிநாட்டு செலாவணி தரும் வாய்ப்பாக பார்க்கக் கூடாது.
2021 க்கும் 2023 க்குமான காலத்தில் 16000 புகார்கள் கிடைக்கப்பெற்றதாக, கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது. தாமதமாக வழங்கப்படும் சம்பளம், தங்கும் இடங்களில் இடர்பாடுகள், வேலை அளிப்பவரால் இடர்பாடுகள் போன்ற புகார்கள் வந்துள்ளன. இதே போல 2022 & 2023 ஆண்டுகளில் 1400 தொழிலாளர்கள் குவைத் நாட்டில் இறந்துபோனதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாயும், கடுமையாக ஊனமுற்றவர்களுக்கு ஐம்பது இலட்ச ரூபாயும் இழப்பீடாக தர வேண்டுமென ஏஐடியுசி கோருகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கொள்கை வேண்டும் எனவும், புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் ஏஐடியுசி கோருகிறது.
2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து ஏஐடியுசி அறிக்கை
மக்களை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியலை நிராகரித்து , அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க உறுதியான நிலையெடுத்த மக்களை ஏஐடியுசி பாராட்டுகிறது.
இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த கருமேகங்களை சாதாரண உழைக்கும் மக்கள் அகற்றி உள்ளனர்.
உலகெங்கும் இருந்து கலாச்சாரத்தையும், பாரம்பரியங்களையும் உள்வாங்கிய, நமது பழைய சிந்து சமவெளி நாகரிகத்திற்கு ஏற்பட இருந்த பேரழிவில் இருந்து நாடு காப்பற்றப்பட்டுள்ளது. சர்வாதிகாரத்தின் ஆபத்தில் இருந்தும் வெறுப்புக் கலாசாரத்தில் இருந்தும், பிளவுபடுத்தும் சதிச்செயல்களில் இருந்தும் தமது தாய்நாட்டை மக்கள் காப்பாற்றி உள்ளனர்.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையான விழுமியங்களான மதச்சார்பற்ற ஜனநாயகம், எதிர்க்கருத்திற்கான உரிமை, பேச்சுரிமை, அனைத்து மதங்களையும், மொழிகளையும், கலாச்சாரத்தையும் காப்பாற்ற வாக்களித்து உள்ளனர். சர்வாதிகாரிகளை எதிர்க்கவும், வீழ்த்தவும் முடியும் என்கிற மக்களின் நம்பிக்கை அதிகரித்து உள்ளது.
தொழிலாளர்கள் – விவசாயிகளின் பிரச்சினைகள், இளைஞர்களுக்கு வேலையின்மை, கல்வி பெறும் உரிமை, எளிய மக்களின் அடிப்படை உரிமைகளான குடியிருப்பு, குடிநீர், சுகாதார வசதி, பெண்களுக்கான நீதி -கண்ணியம் போன்ற முக்கியமான பிரச்சினைகளை தவிர்க்க மோடி அரசு மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன. பிளவுபடுத்தும் பேச்சுக்கள், பொய்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அரசு இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்தியும், அடியாள் பலம் , பண பலம் மூலமாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்த்து, தங்களுக்கு இசைவான அரசுகளை நிறுவும் மோடி அரசின் தந்திரங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுத்துறைகளையும் அரசுத்துறைகளையும் பாதுகாப்பது, தொழிலாளர் விவசாயிகளுக்கு இடையில் ஒற்றுமையை பலப்படுத்துவது, முறைசாரா தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது, வேலை வாய்ப்பை உருவாக்குவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது, பழைய ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளுக்கான போராட்டங்களை தீவிரமாக நடத்தி, உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என ஏஐடியுசி தொழிலாளர் வர்க்கத்தைக் கேட்டுக் கொளகிறது. அதாவது ஆகஸ்டு 2022 ல் நடைபெற்ற விவசாயிகள்- தொழிலாளர் மாநாட்டுத் தீர்மானங்களுக்காக தொடர்ந்து வெற்றி பெறும் வரை போராட வேண்டும்.
ஒன்றுபட்ட தொழிற்சங்க இயக்கம் இதில் தீர்மானமான பங்காற்றியுள்ளது. நாட்டின் நலன், மக்கள் நலன் மேம்பட ஒன்று பட்ட தொழிலாளர், விவசாயிகள் இயக்கம் மேலும் வலுப்பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.