ஜனநாயகத்தில் குடிமக்கள் தங்கள் விரும்புகின்ற ஓர் அரசை தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது. அப்படி தேர்ந்தெடுக்கப்படும் அரசானது, அரசியலமைப்பின் அடிப்படை நெறிகளான சுதந்திரம், சகோதரத்துவம்,நீதி போன்றவைகளை உயர்த்திப்பிடிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக ஆளுகின்ற கட்சி, இத்தைய நெறிமுறைகளுக்கு விரோதமாக சட்டம் இயற்ற முடியாது. இதற்கு சமீபத்திய உதாரணம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கப்படும் என்ற அறிவிப்பாகும். பாகுபாடான இந்த சட்டத்தை எதிர்த்து 2021 ஆண்டு முழுமையும், இந்தியாவெங்கும் போராட்டம் நடந்தது.
தற்போதைய பாஜக அரசானது இரண்டு முறை அதிகாரத்திற்கு தேந்தெடுக்கப்பட்டாலும், அரசியல் அமைப்பு நெறிமுறைகளை கடைபிடிப்பதில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக அதன் நடவடிக்கைகள் அதை தெரிவிக்கின்றன.
அவர்கள் நடவடிக்கைகள், எல்லாவிதமான மாற்றுக்குரலையும் அமைதியாக்கி விட்டன. ஊடகங்களை ஒட்டுமொத்தமாக தனக்கானதாக்கி விட்டனர். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுகின்றனர். அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை போன்ற அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டியோ, ஆசைகாட்டியோ, பெருந்தொகை கொடுத்தோ பாஜக தனது கட்சிக்கு இழுத்து, அதன் மூலமாக எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மாற்றுகின்றனர். பாஜகவிற்கு எதிரான இத்தகைய குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறையோ, மத்திய புலனாய்வுத் துறையோ விசாரிப்பதில்லை.
நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம், தலைமை கணக்குத் தணிக்கையாளர் போன்ற சுயேச்சையான அரசமைப்பு நிறுவனங்கள் மீது தாக்கம் செலுத்தி, அவர்கள் செய்யும் தவறுகள் வெளியே வராமல் பார்த்துக்கொள்கிறார்கள். பாஜக அரசாங்கம் கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்குகள் காலவரையறையின்றி கிடப்பில் இருக்கின்றன. தேர்தல் பத்திர வழக்கில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் பாஜகவிற்கு எதிராக வழங்கியுள்ள தீர்ப்பு பாராட்டப்படுகிறது. பல வழக்குகளில் இதற்கு மட்டும்தான் தீர்ப்பு வந்துள்ளது. பலவிதமான பொருளாதார நடவடிக்கைகள், கேள்வி ஏதுமின்றி மறைக்கப்படுகின்றன. ராம ஜென்ம பூமி வழக்கு, குஜராத் படுகொலை தொடர்பான வழக்குகள், அரசியல் சாசன 370 பிரிவு வழக்கு, நீதிபதி லோயா மரணம், ரபேல் விமான ஊழல் வழக்கு போன்றவைகளில் அரசாங்கத்தின் நிலைபாடுகளை உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்புகளுக்கு மாறாக, அவர்களுக்கு ஏற்றபடி சட்டங்களை போட்டுவருகின்றனர். அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளாத அலுவலர்களை வெளியேற்றுகிறார்கள்; வேட்டையாடுகிறார்கள்.
அரசாங்க புள்ளிவிபரங்கள் வெளிவராதால், அவர்களின் மிகையான பரப்புரைகளை எதிர்கொள்ள முடிவதில்லை. நிதி ஆயோகின் தலைவர் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல்இன்றியும், “இந்தியாவில் வறுமை 5 % குறைந்துள்ளது” என்கிறார். இத்தகைய காரணங்களால் பாஜகாவால் ஆளப்படும் ஒன்றிய அரசினாலும், பாஜக, ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களாலும் இந்தியாவில் ஜனநாயகம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
புது தில்லியில், மார்ச்சு 16,17 தேதிகளில் நடைபெறும் ஏஐடியுசியின் நிர்வாகக்குழுவானது, இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால், வரவிருக்கிற தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்கிறது.
1. இந்திய தொழிலாளர் மாநாடு (ILC) ஒரு முத்தரப்பு அமைப்பாகும். இது கடந்த 10 ஆண்டுகளாக கூட்டப்படவில்லை. (கடைசியாக, இது 2015 ஆம் ஆண்டில் கூட்டப்பட்டது). தொழிலாளர் சட்டங்களில் செய்யப்பட்ட எல்லா மாற்றங்களும், 29 ஒன்றிய தொழிலாளர் குறியீடுகளும், இந்திய தொழிலாளர் மாநாட்டில் நிறைவேற்றப்படாமலேயே மேற்கொள்ளப்பட்டன.
சம்பள சட்டத் தொகுப்பு, 2019 ஆம் ஆண்டிலேயே எந்தவிதமான ஜனநாயக நடைமுறைகளையும் மேற்கொள்ளாமல் நிறைவேற்றப்பட்டது. மூன்று தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும் இந்த நாடு, கோவிட் பெருந்தொற்றால் பீடிக்கப்பட்டு, தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இரண்டு அவைகளையும், ஒட்டுமொத்த எதிர் கட்சிகளும் புறக்கணித்திருந்த காலத்தில் பாராளுமன்றத்தில் தொழிலாளர் சட்டம் குறித்து எந்த விதமான விவாதங்களும் நடைபெறவில்லை. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே இந்த சட்டத்தொகுப்புகளை முன்மொழிந்து அவர்களாகவே நிறைவேற்றிக் கொண்டனர். * இந்திய தொழிலாளர் மாநாட்டை உடனடியாக கூட்ட வேண்டும். * புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை கைவிட வேண்டும். தொழிலாளர் சட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் பற்றி, இந்திய தொழிலாளர் மாநாட்டில், அனைத்து தரப்பினரும் விவாதித்து ஏற்றுக்கொள்வதை கொண்டுவர வேண்டும்.
* தொழிற்சங்கங்கள் வெகு காலமாக ஐஎல்ஓ இணக்கவிதிகள் 87, 98, 189, 199 ஏற்றுக்கொள்ள வேண்டும் என கோரிவருகின்றன.
2. பணியிட பாதுகாப்பு என்பது முக்கியமான பிரச்சனையாகும். தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் பணியிடத்தில் பாதுகாப்பு இன்மை காரணமாக இறந்து போகிறார்கள் அல்லது ஊனமடைகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகவும், குடும்பத்தில் அவர் மட்டுமே உழைப்பவராகவும் இருக்கிறார். அவர்களுக்கு எந்த இழப்பீடும் கிடைப்பதில்லை. எனவே அவர்களது குடும்பங்கள் வாழ்வதற்கு போராடுகின்றன. ஐஎல்ஓ இணக்க விதிகளான 155 & 187 ஐ, 2022 ஆண்டு மாநாட்டில், பணியிட உரிமைகளுக்காக (FPRW) உருவாக்கியுள்ளது.
* இந்த இணக்கவிதிகளை தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பான விதிகளை உருவாக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டும். * பணியிட பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பான விதிகளில், இணக்க விதி 81 ன் படி ஆய்வு (inspection) செய்வது உறுதி செய்ய வேண்டும்.
3.பொதுத்துறை நிறுவனங்களும், அரசு சார்ந்த நிறுவனங்களும் சுரங்கம், இயற்கை வாயு, உற்பத்தி, சேவைத்துறைகளில் நமது நாட்டு முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றி வருகின்றன. நமது நாட்டில் உள்ள அரசுத்துறை, பொதுத் துறை நிறுவனங்களும் சாதாரண மக்கள் பலன் பெறும் வகையில் செயல்பட்டு வருகின்றன. தனியார்மயம், பங்குகளை விற்றல் போன்றவைகள் முன்னெடுக்கப்படுவதால் பொது சேவைகள் பாதிக்கப்படுகின்றன. இது நமது நாட்டின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கிறது. தேசிய பணமயமாக்கல் திட்டம் மூலம் இந்த நாட்டின் சொத்துக்கள் பொருக்கி எடுத்த, பெரு நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன. * ரயில், சாலை போக்குவரத்து, நிலக்கரி சுரங்கங்கள், நிலக்கரி அல்லாத சுரங்கங்கள், துறைமுகம், பாதுகாப்பு, மின்சாரம், தபால் தொலைபேசி,வங்கி, காப்பீடுத்துறை ஆகியவைகளை தனியார்மயமாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். * தேசிய பணமயமாக்கல் திட்டம் (NMP) உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
4. நமது நாட்டின் 41 பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் எதிர்ப்பு, வேலை நிறுத்தத்தையும் மீறி ஏழு நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த ஏழு நிறுவனங்களையும் மூன்றாக குறைக்க அரசு முயன்று வருகிறது. இதனால் தனியார் துறையினரே பலனடைவார்கள். இந்த ஆலைகள் பாதுகாப்புத்துறையிலேயே இருப்பது தேசப்பாதுகாப்பிற்கு அவசியமாகும். எனவே இவைகள் அரசின் வசமே இருக்க வேண்டும். * ராணுவ தளவாட தொழிற்சாலைகளை நிறுவனமாக்கியதை திரும்ப பெற வேண்டும்.
5. குறைந்தபட்ச ஊதியம் குறைவாக உள்ளது. அரசமைப்பு சட்டம் கூறியுள்ள வாழ்வூதியத்தை தர வேண்டும் என்று கோரி வருகிறோம். ஆனால் 15 வது இந்திய தொழிலாளர் மாநாட்டுப் பரிந்துரைபடியும், ரப்டகாஸ் வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்புபடியும் கூட குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படுவதில்லை. * குறைந்தது 26,000 ரூபாயாக குறைந்தபட்ச ஊதியம் இருக்க வேண்டும். * ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அவை விலைவாசிப் புள்ளிக்கேற்றபடி அவை மாற்றியமைக்க வேண்டும். * எட்டாவது ஊதியக்குழு விரைவில் அமைக்கப்பட வேண்டும்.
6. வேலையிழப்பும், காலி இடங்கள் நிரப்பப்படாததும் கடுமையான வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கியுள்ளன. வெளிச்சந்தை முறை, ஒப்பந்த முறை, தினக்கூலி முறை போன்றவைகளால் தொழிலாளர்கள் கடும் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். குறித்தகால வேலையானது, தொழிலாளர்களின் வாழ்க்கையை நிச்சயமற்ற முறையில் வைத்துள்ளது. * குறித்த கால வேலை முறை திரும்ப பெற வேண்டும். * உடனடியாக அரசாங்கம் காலியாக உள்ள இடங்களில் பணி நியமனம் செய்ய வேண்டும். காலாவதியான பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும். * முன்னெப்போதும் இல்லாத வகையில் வேலையின்மை உருவாகியுள்ள நிலையில், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முன்னுரிமை தர வேண்டும். * ராணுவத்தில் அக்னிபாத் திட்டம் கைவிடப்பட்டு, முறையான ஆளெடுப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். * எட்டு மணிநேர வேலை உரிமை தொழிற்சங்கங்களால் கடுமையாக போராடி பெற்றதாகும். இதனை மீறுவது, உலக தொழிலாளர் அமைப்பின் இணக்கவிதி எண் ஒன்றை மீறுவதாகும். இதனை மீறுவது நிறுத்தப்பட வேண்டும். * சம வேலைக்கு சம ஊதியம் அமலாக்கப்பட வேண்டும்.
7. கல்வி, சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு வரவுசெலவு அறிக்கையில் குறைந்துள்ளது; பணவீக்கம் உண்மையான மதிப்பை மேலும் குறைத்துள்ளது. புதிய கல்விக் கொள்கையானது கல்வியை வணிகமயமாக்கும், நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் ஏழை மாணவர்கள் கல்வி பெறுவது பாதிக்கப்படும். நடுத்தர மக்களும் இதனால் பாதிக்கப்படுபவர்கள். தொழிலாளர்களின், முக்கியமாக அமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி எட்டாமல் போய்விடும். எனவே, புதிய கல்விக் கொள்கை திரும்பப் பெற வேண்டும்.
8. அடிப்படையான குடிமைச் சேவைகள் மோசமாகி வருகின்றன. தொழிற்கூடங்கள் மோசமாக பாதிப்படைவதால், தொழிலாளர்கள் உடல்நலம் பாதிப்படைகின்றனர்; இதனால் வேலைநாட்கள் குறைகின்றன. * தொழிலாளர்களின் சுகாதாரவசதிகள் விரிவாக்கப்பட வேண்டும் * மக்களின் அடிப்படையான வாழ்க்கைக்கு தேவையானதை உறுதி செய்ய சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். * இத்தகைய சேவைகளில் ஒப்பந்த முறை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
9. மூத்த குடிமக்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ, அனைவருக்கும் ஓய்வூதியப் பலன்கள் விரிவாக்கம் செய்ய வேண்டும். ஓய்வூதியம் என்பது ஓர் உரிமையாக இருக்க வேண்டும். * பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்பக் கொண்டு வர வேண்டும். * தொழிலாளர் ஓய்வூதியதிட்டம் 95 ( EPS) இருப்பவர்களுக்கு குறைந்தது ஒன்பதாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். * எந்த திட்டத்திலும் வராதவர்களுக்கு, மத்திய- மாநில அரசுகளின் வரவு செலவு திட்டத்தில், சிறப்பு நிதியை உருவாக்கி அதன் மூலமாக மாதம் ரூபாய் 6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
10. பீடி, புகையிலை தொழிலாளர் சட்டம் 1966 – இல் 75 இலட்சம் பீடி தொழிலாளர்களுக்கு சமூகப்பாதுகாப்பு கிடைத்து வந்தது. ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டவுடன், இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் இருந்த தொழிலாளர்கள் நீதிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். * அவர்கள், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் (ESI) இணைக்கப்பட வேண்டும்.
11. 71 மில்லியன் கட்டட தொழிலாளர்களுக்கு சமூகப்பாதுகாப்பை தரும் வகையில், அவர்களை தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தில் இணைக்க வேண்டும். அவர்களுடைய பங்களிப்புத் தொகையை, கட்டிட தொழிலாளர் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வாரிய நிதி மூலம் தர வேண்டும். தொழிலாளர் துறை 2020 ஆம் ஆண்டில் கூறியபடி, கிட்டத்தட்ட 38,000 கோடி ரூபாய் கட்டட தொழிலாளர் நல வாரியங்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றது. ( தற்போது 80 ஆயிரம் கோடிக்கும் மேலாக உள்ளது)
* வாரியத்தில் இணைந்தால்தான் சமூக பாதுகாப்பும் மற்ற நல உதவிகளும் கிடைக்கும். எனவே தொழிலாளர்கள் வாரியத்தில் பதிவு செய்வதை எளிதாக்க வேண்டும்.
12. கடைசியாக வந்த தகவல் படி, 27.88 ( இ ஷ்ரம் போர்ட்டல் தகவல் 30.74 கோடி) கோடிக்கும் மேல் இ- ஷ்ரம் இணையத்தில் பதிவு செய்துள்ளனர். இ- ஷ்ரம் தளத்தில் பதிவு செய்தவர்களுக்கு சமூக பாதுகாப்பை விரிவுபடுத்த வேண்டும். இ- ஷரம் தரவுகளைப் பயன்படுத்தி, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பயன்தரும் கொள்கைகளை உருவாக்க வேண்டும். அவர்களுக்கு அடிப்படையான சுகாதார வசதி, மகப்பேறு உதவி, குழந்தைகளுக்கு கல்வி, காப்பீடு போன்றவைகளை அளிக்க வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் இதற்கென நிதியை சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக ஒதுக்கி, பயன்படுத்த வேண்டும்.
அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் ஒரு கோடிக்கும் அதிகமானோர், பல்வேறு துறைகளில் தன்னார்வலர்கள் என்ற பெயரில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு மதிப்பூதியமே ( Honorarium) வழங்கப்படுகிறது.
இந்திய தொழிலாளர் மாநாட்டு பரிந்துரைப்படி, அவர்களுக்கு தொழிலாளர் அந்தஸ்து வழங்க வேண்டும். அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு, ஆஷா கிரன் போன்றவைகளில் வேலை செய்பவர்களுக்கு இஎஸ்ஐ வழங்க வேண்டும்.
பருவநிலை மாற்ற நிதியை அமைக்க வேண்டிய அவசியத்தேவை எழுந்துள்ளது. இதன் மூலம் வெப்பக்காற்று, வெள்ளம், சூறாவளி, பருவம் தப்பி பெய்யும் மழை போன்றவைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு நிவாரணம் தர முடியும். இதன் மூலம், பாதிக்கப்படும் குடும்பங்களின் அடிப்படையான தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வருமான இழப்பு ஏற்படும் போது அதனை ஈடுகட்டவும் அந்த தொகை பயன்படும். பருவ நிலை மாற்ற நிதி ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தேசிய கொள்கை அவசியமான ஒன்றாகும். மாநிலங்களுக்கிடையான புலம்பெயர் தொழிலாளர் சட்டம் 1979 ஐ மறு ஆய்வு செய்து, அதனை வலிமைப்படுத்தி, அமல்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சர்வதேசப் புலம்பெயர் தொழிலாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப, புலம்பெயர் கொள்கைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. எனவே அவர்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை போல நகர்புறத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், 43வது இந்திய தொழிலாளர் மாநாட்டின் ஒருமனதான பரிந்துரையின்படி வேலைவாய்ப்புத் திட்டம் உருவாக்க வேண்டும்.
அரசாங்கமானது, உலக தொழிலாளர் அமைப்பின் இணக்க விதிக்கு ஒப்ப, சட்டங்களை உருவாக்கி, வீடு சார்ந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் 5 கோடி தொழிலாளர்கள் உருப்படிக்கான கூலி அடிப்படையில் (piece rate) பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கும் ஊதியம், சமூகப்பாதுகாப்பு, சுகாதார வசதி போன்றவைகளை உறுதி செய்ய வேண்டும்.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி குறைந்தபட்ச ஊதியமானது திருத்தம் செய்யப்பட வேண்டும். இதனால் தோட்டம், சுரங்கம், கட்டுமானம், விவசாயம், கைத்தொழில், வீட்டு வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள். இந்த ஊதியம் குறித்து கெடுவாய்ப்பாக விவாதங்கள் நடைபெறுவதில்லை. 15-வது இந்திய தொழிலாளர் மாநாட்டு முடிவின்படி அறிவியல் பூர்வமான வகையில் குறைந்தபட்சம் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யவேண்டும். இதனை உச்ச நீதிமன்றமும் ரெப்டகாஸ் பிரெட் வழக்கிலும் (1992) , உனிச்சோயி & மற்றவர்கள் எதிர் கேரள அரசு வழக்கிலும் ( Unichoyi & others vs The state of Kerala) (1962) உறுதிப்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் தேவையின் அடிப்படையில் ஆனதாகும். உணவு, உடை, இருப்பிடம், போக்குவரத்து, மருத்துவம், கல்வி போன்ற செலவினங்களோடு, திருமணம், திருவிழாக்கள் உள்ளிட்ட சமூக கலாச்சார நிகழ்வுகளுக்காகும் செலவுகளையும் சேர்த்து ஊதியமானது கணக்கிடப்பட வேண்டும். கீழ்கண்ட காரணிகளின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் கணக்கிடப்பட வேண்டும் ரெப்டகாஸ் வழக்கின் அடிப்படையில் வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன:
மூன்று நுகர்வோரின் செலவுகள் ஒரு சம்பளதாரருக்கு கணக்கிடப்பட வேண்டும்
ஒரு சராசரி மனிதனுக்கு நாளொன்றுக்கு 2700 கேலரி சத்து தேவைப்படும் உணவு தேவை என டாக்டர். அக்ராய்டு பரிந்துரைத்துள்ளார்.
ஒரு ஆண்டுக்கு 72 கஜம் துணி
அரசாங்க தொழில் பகுதியில் உள்ள வீட்டு வசதிப்படி வாடகை
ஒட்டுமொத்த சம்பளத்தில் 20% எரிபொருள், விளக்கு உள்ளிட்ட இதர செலவின வகைகளுக்கு
குழந்தைகள் கல்வி, மருத்துவம், குறைந்த பட்ச பொழுபோக்கு, முதுமைக்கால பாதுகாப்பு, திருமணம் போன்றவைகள் குறைந்த பட்ச ஊதியத்தில் 25 % ஆக கணக்கிடப்படும்.
இதுதான் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும். ஆனால் மத்திய, மாநில அரசாங்கங்கள் தன்னிச்சையாக ஊதியத்தை திருத்துகின்றன. மத்திய மாநில அரசுகள் அதனுடைய நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு ரெப்டகாஸ் வழக்கு அடிப்படையில் நியாயமாக ஊதியத்தை நிர்ணயம் செய்கின்றன. ஆனால் இத்தகைய நடைமுறையை தனியார் துறை தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கும்போது கடைபிடிப்பதில்லை. இதனால் அரசாங்கம் பெருநிறுவனங்களின் நலனைப் பாதுகாக்க எடுக்கும் பாசங்குத்தனமான நடவடிக்கை அம்பலமாகிறது.
குறைந்த பட்ச ஊதியம் என்பது போராட்டங்களின்போது பேசப்படும் முழக்கம் அல்ல என்று ஏஐடியுசி கருதுகிறது. அறிவியல்பூர்வமாக குறைந்தபடச ஊதியத்தை நிர்ணயம் செய்யும் வகையில் நமது பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும். ஆலோசனைக் குழுக்களில் அதற்குரிய வாதுரைகளைச் செய்ய வேண்டும். சட்டப் போராட்டங்களை நடத்த வேண்டும். கர்நாடக மாநில ஏஐடியுசி, இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி குறைந்த பட்ச ஊதியமானது ரூ.31,556 என்ற முடிவுக்கு வந்துள்ளது. இதற்காக மாநில, மாவட்ட அளவில் போராட்டங்களை நடத்தியும். அதனைத் தொடர்ந்து சட்டப்போராட்டத்தையும் நடத்துகிறது.
மக்களுடைய வாங்கும்சக்தி தொடர்ந்து குறைந்து வருகிறது. குறைந்த பட்ச ஊதியத்தை சரியாக திருத்துவதன் மூலம் தனியார் நுகர்வு அதிகரிக்கும்; அது பொருளாதாரத்திலும் பிரதிபலிக்கும். தனியார் நுகர்வு என்பது மொத்த ஜிடிபியில் 60 % ஆகும். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு மக்கள் செலவு செய்வது குறைந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. அவர்களின் கடன் அதிகரித்துள்ளது.
மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதால் சந்தையில் பொருட்களின் தேவை குறைந்துள்ளது. இதனால் உற்பத்தி மேலும் குறைந்து, வேலைவாய்ப்பு பாதிக்கிறது. எனவே மக்களின் உண்மையான ஊதியம் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி, திருத்தப்பட வேண்டும்.தற்போதைய கால மாற்றத்திற்கொப்ப இணைய வசதியும் குறைந்தபட்ச ஊதியத்தில் இடம்பெற வேண்டும். பெற்றோர்களை பாதுகாக்க வேண்டிய சட்டபூர்வ நிலையும் வந்துள்ளதால் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. எனவே பெற்றோர்களுக்கான செலவையும் சேர்த்து, சம்பளம் வாங்கும் ஒருவருக்கு ஐந்து அலகுகள் வீதம் குறைந்த பட்ச ஊதியம் கணக்கிட வேண்டும்.
எனவே விசாகப்பட்டினத்தில் செப்டம்பர் 1முதல் 3 வரை கூடியுள்ள ஏஐடியுசி பொதுக்குழுவானது, அரசுக்கும் பெருநிறுவன நலன்களுக்கும் இடையில் உள்ள உறவுக்கு எதிராக அறிவியல்பூர்வமான வகையில் குறைந்தபட்ச ஊதியத்தை திருத்துவற்கான பரப்புரையில் தீவிரமாக ஈடுபட வேண்டுமென தீர்மானிக்கிறது.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் திரும்பப்பெறுக – தொழிற்சங்கங்களின் கூட்டறிக்கை
ஜூலை ஒன்றாம் நாள் முதல் அமலாக்கப்பட்டுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது.
இந்தச் சட்டங்கள் முறையான விவாதங்கள் இல்லாமல், பாராளுமன்ற குழு கொடுத்துள்ள பரிந்துரைகளைக் கூட கண்டுகொள்ளாமல், நகல் கொள்கையை பொதுவெளியில் வைக்காமல் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
வெள்ளையர் கால சட்டங்களுக்குப் பதிலாக இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று சொல்லப்படுவது தவறாகும். ஏனெனில் பழைய சட்டங்களின் அனைத்துப் பிரிவுகளும் புதிய சட்டங்களில் உள்ளன; இன்னும் சொல்லப்போனானால் சில பிரிவுகள் கடுமையாகவும் உள்ளன. உதாரணமாக இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 பிரிவு புதிய சட்டத்திலும் உள்ளது. அதற்கு மூன்று வருட சிறைத்தண்டனை என்பது ஏழு ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
மக்கள் எப்படி ஒன்றுகூடினாலும், தலைவர்கள் ஒன்றுகூடினாலும் அவர்களை தீவிரவாதிகள் என்று சொல்ல முடியும். அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் இந்தப் பிரிவின்கீழ் கொண்டுவர முடியும்.
இவற்றின் பல பிரிவுகளின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. இது குழப்பத்தை உருவாக்குவதோடு, வழக்குகள் தேங்குவதை பெருமளவில் வருங்காலங்களில் அதிகரிக்கும். தற்போது கீழ்மட்ட நீதிமன்றங்களில் 6.4 கோடி வழக்குகள் சமாளிக்க முடியாத அளவுக்கு தேங்கியுள்ளன.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உருவான தீர்ப்பு வழிச்சட்டங்கள் (case law) புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்கத்தினால், இனி பயனற்றுப் போகும். இதனால் வழக்காடிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என அனைவரும் அரசியலமைப்பு முடிவுகளுக்கு வர போராட வேண்டி இருக்கும்.
காவல் ஆய்வாளர்களுக்கு முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்ய முழு அதிகாரமும்- அதாவது பதிவு செய்யலாமா என்ற விருப்பமும் – கொடுக்கப்பட்டுள்ளது. பழைய சட்டத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்.
போலிஸ் காவலில் இருக்கும் காலமானது 15நாட்களில் இருந்து 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான வழியில் போராடுபவர்கள் மீதும், முற்றுகையிடும் (gherao) தொழிலாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இது ஆட்சிசெய்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடக்குமுறையை கையாள விரும்பும் காவல் அரசிற்கு (police raj) கட்டியம் சொல்வது போல உள்ளது.
தற்போது நடைமுறையில், நீதி வழங்குவதைக் குறிக்கும் சொல்லான “நீதி வழங்கும் நீதிமன்றம்” (Court of Justice) என்ற வரையறையானது “நீதிமன்றம்”(court) என்று மாற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே வாகன ஓட்டிகள் ‘மோதிவிட்டு ஓடிவிடும்’ (hit and run) வழக்குகளை எதிர்த்து போராடியதால் பின்னடைவு ஏற்பட்டது. அரசாங்கம் அந்தப் பிரிவுகளை அமலாக்கமாட்டோம் என கூறியது; ஆனால் அந்தப் பிரிவுகளை அவர்கள் நீக்கவில்லை.
இந்தி பேசாத மக்கள் இந்தியை திணிப்பதை எதிர்த்துள்ளனர். அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 348 – ம், அரசு மொழிச் சட்டமும் பாராளுமன்றம், சட்டமன்றம் இயற்றுபவை அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், 2016 ல் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் போன்றதொரு முட்டாள்தனமான, அதைவிட அபாயகரமான நடவடிக்கையாகும். நவ தாராளவாத கொள்கைகளுக்கு இசைவான, மக்களின் உரிமைகள் மீது தாக்குதலைத் தொடுப்பதாகும்.
மத்திய தொழிற்சங்கங்கள், சுயேச்சையான சமரமேளனங்கள், சங்கங்களின் பொது மேடையானது, புதிய குற்றவியல் சட்டங்களை நீக்கிவிட்டு பழைய சட்டங்களே தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறது. புதிய மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டி இருப்பின் அதனை ஏற்றுக் கொண்டு அமலாக்குவதற்கு முன்பு பொதுவெளியில் விவாதிக்க வேண்டும்.
INTUC AITUC HMS CITU AIUTUC TUCC SEWA AICCTU LPF UTUC