வேலையில்லா திண்டாட்டம், பெருந்தொற்றுக் காலத்திற்கு பிறகான சூழல், வேலையில் நிகழும் மாற்றங்கள், விருப்பங்கள் போன்ற காரணிகளினால் நிச்சயமற்றதன்மை, பாதுகாப்பின்மை இருந்தாலும் சுதந்திரமாக செய்யும் வேலைக்கு வாய்ப்புகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. இதனால் சட்டபூர்வமான முறையில் பாதுகாப்பற்ற அமைப்புச்சரா தொழிலாளர்கள் பணிபுரியும் சூழல் அதிகரித்து உள்ளது.
சமீபத்தில் People’s Association in Grass roots Action and Movements என்ற அமைப்புஓமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியாவில் பணிபுரியும் கிக் தொழிலாளர்களின் மோசமான சூழல்களை காட்டியுள்ளது. செயலிகளை வைத்துப் பணிபுரியும் மூன்றில் ஒரு பங்கு ஓட்டுநர்கள் நாளொன்றுக்கு 14 மணி நேரத்திற்கு மேலாகவும், 83 % ற்கும் அதிகமானோர் 10 மணி நேரத்திற்கு மேலாகவும், 60% ற்கும் அதிகமானோர் 12மணி நேரத்திற்கு மேலாகவும் பணிபுரிகின்றனர் என்ற நிலமையை வெளிப்படுத்தி உள்ளது.
43 % ற்கும் அதிகமானோர், எல்லா செலவும் போக நாளொன்றுக்கு 500 ரூபாய்க்கும் குறைவாக அதாவது மாதமொன்றுக்கு 15,000 ரூபாய் பெறுவதாக கூறியுள்ளனர். இது பெரும்பாலான தொழிலாளர்களின் மோசமான சூழலை காட்டுகிறது.
76 % பொருள் விநியோகிப்பாளர்கள் (delivery boy) பொருளாதார ரீதியாக சிரமப்படுகிறார்கள். இதுதான் இந்த தொழிலில் நிலவி வருகிறது.
முகவரியைத் தேடும்போது வரும் சிக்கல்கள், வாடிக்கையாளர்களின் தவறான நடத்தை போன்றவை செயலி மூலம் வேலை செய்யும் ஓட்டுநர்களுக்கும் விநியோகிப்பாளர்களுக்கும் மேலும் சிரமங்களைத் தருகின்றன.
பல்வேறு வகுப்பைச் சார்ந்தவர்களுடையே நிலவும் சமூக ஏற்றத்தாழ்வு, பொருளாதார வேறுபாடு போன்றவை வறுமையை நிரந்தரமாக நீடிக்கச் செய்கின்றன. நீண்டநேர வேலை அவர்களை சோர்வுக்கு உள்ளாக்குகிறது. சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் சூழல் உள்ளது. இதோடு இணையத்தினால் துரிதமாக பொருட்களை தர வேண்டும் என்ற அழுத்தங்களும் உள்ளன. வேலைப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு போன்றவை கூடுதல் அழுத்தங்களைத் தருகின்றன. அவர்களுக்கு சுகாதார ரீதியான ஆபத்துகளும் உள்ளன. பட்டியலின மக்கள் விகித்தாச்சாரத்திற்கும் புறம்பாக இப்பணிகளில் உள்ளனர். இதில் 60 % அதிகமானோர் 14 மணி நேரத்திற்கு அதிகமாக பணிபுரியும் சூழலில் உள்ளனர். மற்ற பிரிவினரில் 16 % மட்டுமே இவ்வாறு உள்ளனர் என அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.
புது தில்லியில், மார்ச்சு 16,17 தேதிகளில் நடைபெறும் ஏஐடியுசியின் நிர்வாகக்குழுவானது, பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, மற்ற பணி நிலமைகளை உறுதி செய்யும்வகையில், கிக் தொழிலாளர்களுக்கென தனியான சட்டம் இயற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.
இந்தியா முழுவதும் 25 கோடி சீர்மிகு மீட்டர் (smart meter) நிறுவும் கொள்கை அமலாக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒன்றிய அரசு 60 சத நிதியையும், மாநில அரசுகள் மீதித்தொகையையும், மின்சாரத்தை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு (Discoms) தர வேண்டும். பெருநிறுவனங்களின் கோரிக்கைப்படி சீர்மிகு மீட்டர்கள் பொறுத்தும் திட்டம் அமலாக்கப்படுகிறது. இதனால் மின்சாரத்துறையில், இலாபம் வரும் பகுதியை தனியாருக்கு அளிக்க உள்ளனர்.
தனியார் பெருநிறுவனங்கள் மின் உற்பத்தி, பகிர்மானம், விநியோகம் என அனைத்தையும் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர விரும்புகின்றனர். மின்சாரத்திற்கு தரப்படும் எல்லாவித மானியத்தையும் நிறுத்த விரும்புகின்றனர். சீர்மிகு மீட்டர் அமலானால், முன்னதாகவே பணத்தை கட்டினால்தான் மின்சாரம் கடைக்கும். நுகர்வோர், அரசாங்கத்தின் பணத்தைக்கொண்டு, தங்கள் இலாபத்தை அதிகரித்துக் கொள்வதே முதலாளிகளின் நோக்கமாகும். மின் கட்டணம் வருடம்தோறும் நிர்ணயிக்கப்படும். இதனால் மின்சாரம் அடிப்படை தேவை என்ற நிலையில் இருந்து மாறி, இலாப நோக்கிலேயே செயல்படும். தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். தமிழ்நாட்டில் 20,000 தொழிலாளர்களும், மகாராஷ்டிரா வில் 30,000 தொழிலாளர்களும் வேலை இழப்பர். சீர்மிகு மீட்டர் திட்டத்தை, மின்சார தொழிலாளர்கள், நுகர்வோர், பொதுமக்களோடு இணைந்து எதிர்த்து வருகிறார்கள்.
மக்கள் விரோத, மாநில அரசுகளுக்கு விரோதமான, பெரு நிறுவனங்கள் பலன் அடையும் வகையில் 2022 ல் மின் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. மின் விநியோகத்தில் பல வகைகளில் தனியாருக்கு உரிமம் வழங்குவதற்கு இது வழிவகை செய்தது. இதனால் மின்சாரம் தனியார்மயமாகும். தொழிலாளர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பு காரணமாக அது சட்டமாகவில்லை. இதிலுள்ள பிரிவுகள் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளன. மின்சாரம் விநியோகம் செய்பவர்கள் இதில் முதலீடு ஏதும் செய்யப்போவதில்லை.
நுகர்வோருக்கு விரோதமான, தேச விரோதமான, மாநில உரிமைகளைப் பறிக்கும் காட்டுமிராண்டி மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். தனியார்மயத்தை எதிர்த்து போராடும் 15 இலடசம் மின் தொழிலாளர்களுக்கு ஏஐடியுசி தனது ஆதரவை நல்குகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை தொடர்ந்து எதிர்க்கிறோம்
குடியுரிமை திருத்தச் சட்டம்(CAA), தேசிய மக்கள் தொகைப் பதிவேடு(NPR), தேசிய குடிமக்கள் பதிவேடு(NRC) ஆகியவற்றை அமலாக்க, பாஜக செய்யும் அனைத்து முயற்சிகளை எதிர்க்க ஏஐடியுசி உறுதி கொள்கிறது. மார்ச்சு 2024 முதல் குடியுரிமை திருத்த சட்டம் 2019 அமலுக்கு வந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை இசுலாமிய சிறுபான்மையினரை மட்டும் ஒடுக்குவதற்காக கொண்டுவரப்படவில்லை. இதனால் இந்தியா முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான வீடற்றவர்களும் பாதிப்பு அடைவர். வீடற்ற 99 % மக்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை. இவர்கள் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஆவார்கள். வீடற்ற 30 % மக்களுக்கு எந்தவித அடையாளச் சான்றும் இல்லை என்று சொல்லப்படுகிறது. கிராமப்புற நெருக்கடியால் இடம்பெயரும் பழங்குடி, நாடோடி, புலம்பெயர்ந்த மக்களிடம் தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகளுக்கு தருவதற்கு தேவையான ஆவணம் ஏதும் இருப்பதில்லை.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு முன்னோட்டமாக செய்யப்படுவதாகும். நிரூபிக்கப்படும் வரை இந்தியாவில் வாழ்பவர்கள் அனைவரும் சட்டவிரோத குடியேறிகள் என்ற எண்ணத்தில் பாஜக இந்த நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இது அரசியலமைப்பின் மீதும், 1955 ஆம் ஆண்டின் இந்திய குடியுரிமைச் சட்டத்தின் மீதும் தொடுக்கப்படும் தாக்குதலாகும். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகள் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ளன; இதன் வழியாக மக்கள்தொகை விவரங்களையும், உயிரியளவியல் (Bio metric) விவரங்களையும் பாஜக சேகரித்து கண்காணிப்பிற்குள் வைத்துக்கொள்ள இருக்கிறது.
பாஜக ஆட்சியில் இருந்த போது 2003 ஆம் ஆண்டில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஒவ்வொரு குடிமகனும் தன்னை பதிவு செய்துகொள்ள வேண்டும்; தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்ற சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டது. இதனால் மக்கள் தொகை பதிவேடு உருவாக சட்டப்பூர்வமான ஏற்பாடு வந்தது; இது மக்கள் தொகை கணக்கீட்டோடும், தேசிய குடிமக்கள் பதிவேட்டோடும் இணைக்கப்பட்டது.
தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு நாடு முழுவதும் வந்த எதிர்ப்பின் காரணமாக, தேசிய மக்கள் தொகை பதிவேட்டையும், குடிமக்கள் பதிவேட்டையும் நிறுத்தி வைத்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் இசுலாமிய சிறுபான்மையினருக்கு குடியுரிமையை மறுக்கிறது; அதே சமயம் முஸ்லிம் அல்லாத சட்டவிரோத குடியேறிகளை பாதுகாக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு காட்டுமிராண்டித்தனமானவை; அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவையாகும்.
மதம், சாதி, இனம், வகுப்பு அடிப்படையில் மக்களை நசுக்கும் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் ஏஐடியுசி எதிர்க்கிறது.
சில நாட்களுக்கு முன்னர் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்த தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் கைது செய்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களை நடுக்கடலில் தாக்கி கைது செய்யும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்கிறது. ஒன்றிய அரசு உரிய தீர்வு காண தயாராக இல்லை. மற்றொருபுறம் கடந்த சில ஆண்டுகளாக மீனவர்களுக்கு மீன்பாடு இல்லை. மீன்களுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் பல மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அப்படி இரான் நாட்டிற்கு ராமநாதபுரம் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட இந்தியாவிலிருந்து ஒப்பந்த தொழிலாளர்களாக இரானுக்கு சென்றனர்.
மோசமான வேலை சூழல் காரணமாக உரிமையாளரின் படகை பயன்படுத்தி .இரான் நாட்டிலிருந்து தப்பி கடல் வழியாக விசைப்படகு மூலமாகவே 3,500 கிமீ தூரத்தை கடந்து 14 நாட்கள் கடலில் பயணித்து தப்பி வந்து சேர்ந்தனர். தப்பமுடியாமல் பலப் பல தொழிலாளர்கள் என்ன பாடு படுகிறார்களோ!
நான்கு தலைமுறையாக வேலை பார்த்துவந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் 700 குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வாழ்ந்த வீடு, வேலைபார்த்த நிலம், படித்த பள்ளி, முன்னோர்களின் கல்லறைகள், சக தொழிலாளர்களுடனான உறவு என எல்லாவற்றின் மீதும் ஒரு விலக்க முடியாத திரை விழுந்து, சொந்த நாட்டில் அறிவிக்கப்படாத அகதிகளாக்கப் பட்டுள்ளனர்.
வேலை தேடி குவைத் நாட்டுக்கு சென்ற தொழிலாளர்கள் 50 பேர் தீ விபத்தில் கரிக்கட்டைகளாகி பெட்டியில் அடைத்து சடலங்களாக வந்தனர். சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அரசு மது பானக்கடைகளில் சமூக விரோதிகள் தாக்குதலால் உயிரிழப்புகளும், கொடும் காயங்களும் தொடர்கதையாகும். இது போன்ற எண்ணற்ற இன்னல்களுடன் தொழிலாளர்கள் வாழ்வு! கள்ளக்குறிச்சியில் 120 ரூபாய் கொடுத்து அரசு மதுபானக் கடையில் மது வாங்க முடியாத தொழிலாளர்கள் கள்ள சந்தை மதுவை பயன்படுத்தி வந்ததால் 58 பேர் உயிரழந்து அவர்கள் குடும்பம் நிர்க்கதியாக்கப்பட்டுள்ள நிலையும் தொடர்கதை! இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையின்மையின் காரணமாக, ஏதோ வேலைக்காக இடம்பெயர்வது அதிகரித்துள்ளது. உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் பாதுகாப்பற்ற வேலை, உத்தரவாதமில்லாத வாழ்க்கை என்னும் நிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தொழிற்சங்கங்களை வில்லன்களாக பார்க்க வேண்டாம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை பிரதிபலிக்கட்டும் என்று ஒன்றிய நிதியமைச்சரிடம் மத்திய தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. வளர்ச்சியின் நாயகர்களான தொழிலாளர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு ஒன்றிய, மாநில அரசுகள் யாருக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றன என்று இந்திய தொழிலாளி வர்க்கம் உரத்துக் கேட்கட்டும்.