தமிழ்நாடு ஏஐடியூசி 20வது மாநில மாநாடு திருநெல்வேலியில் டிசம்பர் 1, 2, 3 தேதிகளில் நடைபெற இருக்கிறது. 1908ஆம் ஆண்டிலேயே கோரல் மில் தொழிலாளர்களை திரட்டி, வஉசி
வேலை நிறுத்தம் நடத்திய வீரம் விளைந்த மண்ணில் மாநாடு நடைபெறுகிறது- ஒருபுறம் தொழில்களை நடத்துவதற்கு முதலாளிகளுக்கு வசதி செய்து கொடுப்பது என்ற பெயரில் நூறாண்டுகளுக்கும் மேலாக இந்திய தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை எல்லாம் மொத்தமாக பறித்து விட மோடி அரசாங்கம் பெரு முயற்சி எடுத்து வருகிறது. கார்ப்பரேட் நலன்களைப் பாதுகாப்பது தான் மோடி ஆட்சியின் ஒரே இலக்கு. அதோடு சேர்த்து காலம் கடந்து போன பத்தாம் பசலித்தனமான மூட நம்பிக்கைகளை இந்திய மக்களின் மூளைக்குள் பல்வேறு வகைகளில் மோடி அரசு திணித்து வருகிறது.
பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்களை மதம், சாதி, வேதம், புராணங்கள், ரிஷி வாக்கு என்றெல்லாம் சொல்லி அறிவியலுக்கு எதிரான விஷயங்கள் பரப்பப்படுவது தற்செயலானது அல்ல. “நீ இப்போது எவ்வாறு இருக்கிறாயோ, அது உன் தலைவிதி. அதனை உள்னால் மாற்ற முடியாது. இப்போது கஷ்டப்பட்டால், அடுத்த பிறவியில் நன்றாக இருப்பாய்” என்று கூறி, எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவனாக மனிதரை மாற்றி, அவர்களது போராட்ட உணர்வை முனை மழுங்க செய்வதுதான் இந்த பரப்புரைகளின் அடிநாதமாகும்.
ஆனால் இதே ஆட்சியில், இந்திய விவசாயிகளின் ஓராண்டு காலப் போராட்டம், காற்புள்ளி அரைப்புள்ளி கூட மாற்ற மாட்டோம் என்று இறுமாப்போடு சொல்லப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகக் கிழித்து எறிந்து, மக்களின் ஆற்றலே யாரைக் காட்டிலும் பேராற்றல் மிக்கது என்பதை நிரூபித்திருக்கிறது.
வேளாண் சட்டங்களை நிறைவேற்றக்கூடாது என தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியது. ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு அழுத்தமாக வழக்காடுகிறது. ஆனால் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை மிகுந்த ஆர்வத்தோடு வரவேற்று அமுலாக்க ஆயத்தமான நிலையில் இருக்கிறது.
இனிமேல் மாநகராட்சிகளில் ஊழியர்களை பணி நியமனம் செய்வதில்வை, அனைத்தையும் வெளிச்சந்தைக்கு அனுப்புவது என்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டிருப்பது அந்த அரசு கூறும் திராவிட மாடல் என்ற பதத்துக்கு எதிரானதாகும். ஒடுக்கப்பட்ட மக்களை ஒட்டச் சுரண்டுவதற்கு அதிகாரபூர்வமாக வழி வகுப்பது, சமூக நீதி அல்ல; அப்பட்டமான சமூக அநீதியாகும்.
பாரத தேசத்தை பாகுபடுத்த வந்துள்ள தீயசக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை பாதுகாப்பதற்காக இந்த அரசை ஆதரிக்க வேண்டிய கடமை தொழிலாளர் களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் தொழிலாளர் நலன்களை பறிப்பதற்காள வழியில் செல்லுமானால் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயமும் தொழிலாளர் களுக்கு உண்டு. இதற்கான அழுத்தம் திருத்தமான கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டே ஆக வேண்டும்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் ஆக்கபூர்வமாக தமிழ்நாட்டு தொழிலாளி வர்க்கத்தின் ஆற்றலை ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உணர்த்த வேண்டிய ஆக்கபூர்வமான வழிமுறைகளை கண்டறியவும், செயல்படுத்தவும் திட்டமிடுவதற்கான மகத்தான பொறுப்பு எஐடியூசியின் மாநில மாநாட்டுக்கு இருக்கிறது.
ஏஐடியூசியின் விதிமுறைகளின் படி இணைப்புச் சங்கங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள், ஒருவர் தவறாமல் அனைவரும் மாநாட்டுக்கு வாருங்கள். தவறாமல் கருத்துக்களை முன் வையுங்கள்.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் திரும்பப்பெறுக – தொழிற்சங்கங்களின் கூட்டறிக்கை
ஜூலை ஒன்றாம் நாள் முதல் அமலாக்கப்பட்டுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது.
இந்தச் சட்டங்கள் முறையான விவாதங்கள் இல்லாமல், பாராளுமன்ற குழு கொடுத்துள்ள பரிந்துரைகளைக் கூட கண்டுகொள்ளாமல், நகல் கொள்கையை பொதுவெளியில் வைக்காமல் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
வெள்ளையர் கால சட்டங்களுக்குப் பதிலாக இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று சொல்லப்படுவது தவறாகும். ஏனெனில் பழைய சட்டங்களின் அனைத்துப் பிரிவுகளும் புதிய சட்டங்களில் உள்ளன; இன்னும் சொல்லப்போனானால் சில பிரிவுகள் கடுமையாகவும் உள்ளன. உதாரணமாக இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 பிரிவு புதிய சட்டத்திலும் உள்ளது. அதற்கு மூன்று வருட சிறைத்தண்டனை என்பது ஏழு ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
மக்கள் எப்படி ஒன்றுகூடினாலும், தலைவர்கள் ஒன்றுகூடினாலும் அவர்களை தீவிரவாதிகள் என்று சொல்ல முடியும். அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் இந்தப் பிரிவின்கீழ் கொண்டுவர முடியும்.
இவற்றின் பல பிரிவுகளின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. இது குழப்பத்தை உருவாக்குவதோடு, வழக்குகள் தேங்குவதை பெருமளவில் வருங்காலங்களில் அதிகரிக்கும். தற்போது கீழ்மட்ட நீதிமன்றங்களில் 6.4 கோடி வழக்குகள் சமாளிக்க முடியாத அளவுக்கு தேங்கியுள்ளன.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உருவான தீர்ப்பு வழிச்சட்டங்கள் (case law) புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்கத்தினால், இனி பயனற்றுப் போகும். இதனால் வழக்காடிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என அனைவரும் அரசியலமைப்பு முடிவுகளுக்கு வர போராட வேண்டி இருக்கும்.
காவல் ஆய்வாளர்களுக்கு முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்ய முழு அதிகாரமும்- அதாவது பதிவு செய்யலாமா என்ற விருப்பமும் – கொடுக்கப்பட்டுள்ளது. பழைய சட்டத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்.
போலிஸ் காவலில் இருக்கும் காலமானது 15நாட்களில் இருந்து 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான வழியில் போராடுபவர்கள் மீதும், முற்றுகையிடும் (gherao) தொழிலாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இது ஆட்சிசெய்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடக்குமுறையை கையாள விரும்பும் காவல் அரசிற்கு (police raj) கட்டியம் சொல்வது போல உள்ளது.
தற்போது நடைமுறையில், நீதி வழங்குவதைக் குறிக்கும் சொல்லான “நீதி வழங்கும் நீதிமன்றம்” (Court of Justice) என்ற வரையறையானது “நீதிமன்றம்”(court) என்று மாற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே வாகன ஓட்டிகள் ‘மோதிவிட்டு ஓடிவிடும்’ (hit and run) வழக்குகளை எதிர்த்து போராடியதால் பின்னடைவு ஏற்பட்டது. அரசாங்கம் அந்தப் பிரிவுகளை அமலாக்கமாட்டோம் என கூறியது; ஆனால் அந்தப் பிரிவுகளை அவர்கள் நீக்கவில்லை.
இந்தி பேசாத மக்கள் இந்தியை திணிப்பதை எதிர்த்துள்ளனர். அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 348 – ம், அரசு மொழிச் சட்டமும் பாராளுமன்றம், சட்டமன்றம் இயற்றுபவை அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், 2016 ல் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் போன்றதொரு முட்டாள்தனமான, அதைவிட அபாயகரமான நடவடிக்கையாகும். நவ தாராளவாத கொள்கைகளுக்கு இசைவான, மக்களின் உரிமைகள் மீது தாக்குதலைத் தொடுப்பதாகும்.
மத்திய தொழிற்சங்கங்கள், சுயேச்சையான சமரமேளனங்கள், சங்கங்களின் பொது மேடையானது, புதிய குற்றவியல் சட்டங்களை நீக்கிவிட்டு பழைய சட்டங்களே தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறது. புதிய மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டி இருப்பின் அதனை ஏற்றுக் கொண்டு அமலாக்குவதற்கு முன்பு பொதுவெளியில் விவாதிக்க வேண்டும்.
INTUC AITUC HMS CITU AIUTUC TUCC SEWA AICCTU LPF UTUC
குவைத் நாட்டில், தொழிலாளர் முகாமில் நடந்த தீ விபத்தில் இறந்துபோனவர்களுக்காக ஏஐடியுசியின் செயற்குழு தனது அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறையும், குவைத் நாட்டின் தூதரகமும் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வெளிநாடாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலமை குறித்து கவனம் கொள்வது அவசியமானதாகும். தில்லியிலும் மற்ற இடங்களிலும் ஏற்பட்ட இத்தகைய தீ விபத்துகள், தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற பணிச்சூழலில் இருப்பதை கவலைகொள்ள வைக்கின்றன.
“எளிதாக தொழில் செய்வதற்காக” தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் துறை ஆய்வுகளை நீக்குவதைப் பற்றி ஏஐடியுசி தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையின்மையின் காரணமாக, ஏதோ வேலைக்காக இடம்பெயர்வது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பணியிடங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் முனைப்பான நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்; அவர்களை நிலையான வெளிநாட்டு செலாவணி தரும் வாய்ப்பாக பார்க்கக் கூடாது.
2021 க்கும் 2023 க்குமான காலத்தில் 16000 புகார்கள் கிடைக்கப்பெற்றதாக, கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது. தாமதமாக வழங்கப்படும் சம்பளம், தங்கும் இடங்களில் இடர்பாடுகள், வேலை அளிப்பவரால் இடர்பாடுகள் போன்ற புகார்கள் வந்துள்ளன. இதே போல 2022 & 2023 ஆண்டுகளில் 1400 தொழிலாளர்கள் குவைத் நாட்டில் இறந்துபோனதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாயும், கடுமையாக ஊனமுற்றவர்களுக்கு ஐம்பது இலட்ச ரூபாயும் இழப்பீடாக தர வேண்டுமென ஏஐடியுசி கோருகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கொள்கை வேண்டும் எனவும், புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் ஏஐடியுசி கோருகிறது.
2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து ஏஐடியுசி அறிக்கை
மக்களை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியலை நிராகரித்து , அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க உறுதியான நிலையெடுத்த மக்களை ஏஐடியுசி பாராட்டுகிறது.
இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த கருமேகங்களை சாதாரண உழைக்கும் மக்கள் அகற்றி உள்ளனர்.
உலகெங்கும் இருந்து கலாச்சாரத்தையும், பாரம்பரியங்களையும் உள்வாங்கிய, நமது பழைய சிந்து சமவெளி நாகரிகத்திற்கு ஏற்பட இருந்த பேரழிவில் இருந்து நாடு காப்பற்றப்பட்டுள்ளது. சர்வாதிகாரத்தின் ஆபத்தில் இருந்தும் வெறுப்புக் கலாசாரத்தில் இருந்தும், பிளவுபடுத்தும் சதிச்செயல்களில் இருந்தும் தமது தாய்நாட்டை மக்கள் காப்பாற்றி உள்ளனர்.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையான விழுமியங்களான மதச்சார்பற்ற ஜனநாயகம், எதிர்க்கருத்திற்கான உரிமை, பேச்சுரிமை, அனைத்து மதங்களையும், மொழிகளையும், கலாச்சாரத்தையும் காப்பாற்ற வாக்களித்து உள்ளனர். சர்வாதிகாரிகளை எதிர்க்கவும், வீழ்த்தவும் முடியும் என்கிற மக்களின் நம்பிக்கை அதிகரித்து உள்ளது.
தொழிலாளர்கள் – விவசாயிகளின் பிரச்சினைகள், இளைஞர்களுக்கு வேலையின்மை, கல்வி பெறும் உரிமை, எளிய மக்களின் அடிப்படை உரிமைகளான குடியிருப்பு, குடிநீர், சுகாதார வசதி, பெண்களுக்கான நீதி -கண்ணியம் போன்ற முக்கியமான பிரச்சினைகளை தவிர்க்க மோடி அரசு மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன. பிளவுபடுத்தும் பேச்சுக்கள், பொய்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அரசு இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்தியும், அடியாள் பலம் , பண பலம் மூலமாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்த்து, தங்களுக்கு இசைவான அரசுகளை நிறுவும் மோடி அரசின் தந்திரங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுத்துறைகளையும் அரசுத்துறைகளையும் பாதுகாப்பது, தொழிலாளர் விவசாயிகளுக்கு இடையில் ஒற்றுமையை பலப்படுத்துவது, முறைசாரா தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது, வேலை வாய்ப்பை உருவாக்குவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது, பழைய ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளுக்கான போராட்டங்களை தீவிரமாக நடத்தி, உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என ஏஐடியுசி தொழிலாளர் வர்க்கத்தைக் கேட்டுக் கொளகிறது. அதாவது ஆகஸ்டு 2022 ல் நடைபெற்ற விவசாயிகள்- தொழிலாளர் மாநாட்டுத் தீர்மானங்களுக்காக தொடர்ந்து வெற்றி பெறும் வரை போராட வேண்டும்.
ஒன்றுபட்ட தொழிற்சங்க இயக்கம் இதில் தீர்மானமான பங்காற்றியுள்ளது. நாட்டின் நலன், மக்கள் நலன் மேம்பட ஒன்று பட்ட தொழிலாளர், விவசாயிகள் இயக்கம் மேலும் வலுப்பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.