வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு ஆய்வு குறித்து முடிவுகளை ஒன்றிய அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது.
2017-18 இல் தேசிய புள்ளியல் அலுவலகம் நுகர்வோர் செலவின கணக்கீட்டை ஒன்றிய அரசுக்கு தந்தது.
1970களில் இருந்து 2017-18ல் முதல் முறையாக தனிநபர் நுகர்வு செலவு குறைந்துள்ளது என்று கணக்கெடுப்பு காட்டியது. அதனைப் பொறுக்காத மோடி அரசு, அதை “தரவுத்தரமற்றது” என்று குற்றம் சாட்டியது. அந்த முடிவுகளை வெளியிட வேண்டாம் என்று 2019 நவம்பரில் முடிவு செய்தது.
தரவுத் தரத்தில் அனைத்து “செம்மைப்படுத்தல்களையும்’ இணைத்து, 2020-’21 மற்றும் 2021-’22 ஆம் ஆண்டுகளில் அடுத்த நுகர்வோர் செலவினக் கணக்கெடுப்பை நடத்தப் போவதாக அறிவித்தது.
தனது ஆட்சிக்கு சிரமம் ஏற்படுத்தாத வகையில் திருத்தங்களை எல்லாம் செய்து “செம்மைப்படுத்தி” இப்போது முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன.
உணவை விட மற்ற வகைகளுக்கு இந்தியர்கள் அதிக செலவு செய்வதாகவும், இது வளர்ச்சியை கட்டுவதாகவும் பல ஊடகங்கள் மோடி அரசுக்கு ஜால்ரா போட்டு வருகின்றன.
உண்மை நிலவரம் எளிதாக வெளியில் தெரிந்து விடாமல் மறைக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையிலும் கூட, பெரும்பான்மையான இந்திய மக்கள் தங்களது உணவுக்கு கூட போதிய செலவு செய்ய முடியாத நிலையில் வாழ்கிறார்கள் என்ற உண்மை வெளிப்பட்டு உள்ளது.
வீட்டில் சமைக்காமல் வெளியில் இருந்து தருவிக்கப்படும் உணவுக்கான செலவு கூடுதலாகி இருக்கிறதாம். இது வளர்ச்சியா? குடும்பங்கள் சிதைந்து, உதவிக்கு ஆளின்றி, ஆணும் பெண்ணும் வேலை செய்தால் தான் குடும்பச் செலவை சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்ட பின்பு, சமைப்பதற்குரிய நேரம் வீட்டில் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மையாகும்.
நகரப் பகுதிகளில் வாடகை பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்துக்கு இந்தியர்கள் முன்பை விட அதிகம் செலவழிக்கிறார்கள் என்பதை கணக்கீடு காட்டுகிறது
மொபைல் போன்கள், ஃப்ரிட்ஜ், தொலைக்காட்சி பெட்டிகள், இருசக்கர வாகனங்கள், இன்டர்நெட்டுக்கான செலவு ஆகியவை தவிர்க்க முடியாத செலவுகள் ஆகிவிட்டன. முன்பை விட இந்தச் செலவுகள் அதிகமானது உண்மை.
எதை வேண்டுமானாலும் ஒரு ரூபாய் கொடுத்து தவணையில் எடுத்துச் சொல்லுங்கள் என்று கார்ப்பரேட்டுகள் நடத்திய வர்த்தக சூதாட்ட, கண் கவரும் விளம்பர
வலையில் இந்தியர்கள் சிக்கிக் கொண்டார்கள் என்பதும் மெய்தான்.
அதிக வேலை, போதிய ஓய்வின்மை, தூக்கக் குறைபாடு இவை எல்லாம் இந்தியர்களை மருத்துவமனையை நோக்கி தள்ளுகின்றன. அரசின் கையில் இருந்த பொது மருத்துவம், தனியாரிடம் தள்ளப்பட்டு வணிகமயமாகிவிட்டதால், உள்நோயாளியாகவும் வெளி நோயாளியாகவும் இந்தியர்கள் செய்யும் செலவு அதிகரித்திருப்பதை இந்த கணக்கீடு வெளிப்படுத்துகிறது. அதேபோல கல்விக்கான செலவும் உயர்ந்திருக்கிறது.
செலவுகள் அதிகமாகும் போது, வரவு அதிகரிக்கவில்லை என்பதை பல ஆய்வுகள், அறிவியல் பூர்வமாக தெளிவாக நிரூபித்துள்ளன.
எனவே இந்திய மக்களால் குறைக்க முடிந்த ஒரே செலவு அவர்களது உணவாகத்தான் இருக்கிறது. பட்டினி அல்லது அரைகுறை பட்டினி என்ற நிலை வந்துவிட்டது. ஊட்டச்சத்து குறைந்ததாகவும் உணவு மாறிவிட்டது. உலகத்தில் மிகக் கடும் பட்டினியில் உள்ள 15 நாடுகளில் ஒன்று இந்தியா என்பதை ஏற்கனவே ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன. இந்தக் கணக்கீடும் அதற்கு இசைவானதாகவே இருக்கிறது.
உடைகள், செருப்புகள், துணி வகைகள் ஆகியவற்றை வாங்குவதற்காக இந்தியர்கள் செலவிட்ட தொகையும் குறைத்து விட்டது.
இந்தியர்களில் அடி நிலையில் உள்ள மக்கள் ஒரு தனி நபருக்கு ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 1500 ரூபாய்க்கும் குறைவாகத்தான் செலவு செய்ய முடிகிறது. அதே நேரத்தில் மேல் தட்டு மக்கள் தனி நபருக்கு 10,591 செலவு செய்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.
உயர் நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைச் செலவுகளை அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் பார்த்துக் கொள்கின்றன. ஆனால் ஏழைகளுக்கு அனைத்து செலவுகளும் அவர்கள் தலையின் மீதுதான்.
நகரப் பகுதிகளில் இந்தியாவின் சராசரி தனிநபர் நுகர்வுச் செலவு 6459 ஆக இருக்கும் போது, தமிழ்நாடு அதைவிட 1171 புள்ளிகள் அதிகமாகி 7630 என்ற நிலையில் உள்ளது. அதிக நகரமயமான மாநிலங்களில் தமிழ்நாடு முதல் வரிசையில் இருக்கிறது. எனவே இங்கு ஏழைகளும் அதிக செலவு செய்தாக வேண்டும்.
அமெரிக்க அதிபர் வருகையின் போது குஜராத்தில் துணி கட்டி மறைத்தது போல, உண்மை நிலை வெளியில் தெரிந்து விடாமல் கணக்கீட்டு ஆய்வில் மாய்மாலங்களை புள்ளியியல் துறை அமைச்சகம் செய்த போதிலும், உண்மையில் மோடி ஆட்சியில் இந்தியர்கள் துன்புறுகிறார்கள் என்பதை பட்டவர்த்தனமாக இந்த அறிக்கை வெளிக்காட்டி இருக்கிறது.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் திரும்பப்பெறுக – தொழிற்சங்கங்களின் கூட்டறிக்கை
ஜூலை ஒன்றாம் நாள் முதல் அமலாக்கப்பட்டுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது.
இந்தச் சட்டங்கள் முறையான விவாதங்கள் இல்லாமல், பாராளுமன்ற குழு கொடுத்துள்ள பரிந்துரைகளைக் கூட கண்டுகொள்ளாமல், நகல் கொள்கையை பொதுவெளியில் வைக்காமல் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
வெள்ளையர் கால சட்டங்களுக்குப் பதிலாக இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று சொல்லப்படுவது தவறாகும். ஏனெனில் பழைய சட்டங்களின் அனைத்துப் பிரிவுகளும் புதிய சட்டங்களில் உள்ளன; இன்னும் சொல்லப்போனானால் சில பிரிவுகள் கடுமையாகவும் உள்ளன. உதாரணமாக இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 பிரிவு புதிய சட்டத்திலும் உள்ளது. அதற்கு மூன்று வருட சிறைத்தண்டனை என்பது ஏழு ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
மக்கள் எப்படி ஒன்றுகூடினாலும், தலைவர்கள் ஒன்றுகூடினாலும் அவர்களை தீவிரவாதிகள் என்று சொல்ல முடியும். அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் இந்தப் பிரிவின்கீழ் கொண்டுவர முடியும்.
இவற்றின் பல பிரிவுகளின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. இது குழப்பத்தை உருவாக்குவதோடு, வழக்குகள் தேங்குவதை பெருமளவில் வருங்காலங்களில் அதிகரிக்கும். தற்போது கீழ்மட்ட நீதிமன்றங்களில் 6.4 கோடி வழக்குகள் சமாளிக்க முடியாத அளவுக்கு தேங்கியுள்ளன.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உருவான தீர்ப்பு வழிச்சட்டங்கள் (case law) புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்கத்தினால், இனி பயனற்றுப் போகும். இதனால் வழக்காடிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என அனைவரும் அரசியலமைப்பு முடிவுகளுக்கு வர போராட வேண்டி இருக்கும்.
காவல் ஆய்வாளர்களுக்கு முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்ய முழு அதிகாரமும்- அதாவது பதிவு செய்யலாமா என்ற விருப்பமும் – கொடுக்கப்பட்டுள்ளது. பழைய சட்டத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்.
போலிஸ் காவலில் இருக்கும் காலமானது 15நாட்களில் இருந்து 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான வழியில் போராடுபவர்கள் மீதும், முற்றுகையிடும் (gherao) தொழிலாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இது ஆட்சிசெய்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடக்குமுறையை கையாள விரும்பும் காவல் அரசிற்கு (police raj) கட்டியம் சொல்வது போல உள்ளது.
தற்போது நடைமுறையில், நீதி வழங்குவதைக் குறிக்கும் சொல்லான “நீதி வழங்கும் நீதிமன்றம்” (Court of Justice) என்ற வரையறையானது “நீதிமன்றம்”(court) என்று மாற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே வாகன ஓட்டிகள் ‘மோதிவிட்டு ஓடிவிடும்’ (hit and run) வழக்குகளை எதிர்த்து போராடியதால் பின்னடைவு ஏற்பட்டது. அரசாங்கம் அந்தப் பிரிவுகளை அமலாக்கமாட்டோம் என கூறியது; ஆனால் அந்தப் பிரிவுகளை அவர்கள் நீக்கவில்லை.
இந்தி பேசாத மக்கள் இந்தியை திணிப்பதை எதிர்த்துள்ளனர். அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 348 – ம், அரசு மொழிச் சட்டமும் பாராளுமன்றம், சட்டமன்றம் இயற்றுபவை அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், 2016 ல் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் போன்றதொரு முட்டாள்தனமான, அதைவிட அபாயகரமான நடவடிக்கையாகும். நவ தாராளவாத கொள்கைகளுக்கு இசைவான, மக்களின் உரிமைகள் மீது தாக்குதலைத் தொடுப்பதாகும்.
மத்திய தொழிற்சங்கங்கள், சுயேச்சையான சமரமேளனங்கள், சங்கங்களின் பொது மேடையானது, புதிய குற்றவியல் சட்டங்களை நீக்கிவிட்டு பழைய சட்டங்களே தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறது. புதிய மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டி இருப்பின் அதனை ஏற்றுக் கொண்டு அமலாக்குவதற்கு முன்பு பொதுவெளியில் விவாதிக்க வேண்டும்.
INTUC AITUC HMS CITU AIUTUC TUCC SEWA AICCTU LPF UTUC
குவைத் நாட்டில், தொழிலாளர் முகாமில் நடந்த தீ விபத்தில் இறந்துபோனவர்களுக்காக ஏஐடியுசியின் செயற்குழு தனது அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறையும், குவைத் நாட்டின் தூதரகமும் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வெளிநாடாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலமை குறித்து கவனம் கொள்வது அவசியமானதாகும். தில்லியிலும் மற்ற இடங்களிலும் ஏற்பட்ட இத்தகைய தீ விபத்துகள், தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற பணிச்சூழலில் இருப்பதை கவலைகொள்ள வைக்கின்றன.
“எளிதாக தொழில் செய்வதற்காக” தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் துறை ஆய்வுகளை நீக்குவதைப் பற்றி ஏஐடியுசி தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையின்மையின் காரணமாக, ஏதோ வேலைக்காக இடம்பெயர்வது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பணியிடங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் முனைப்பான நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்; அவர்களை நிலையான வெளிநாட்டு செலாவணி தரும் வாய்ப்பாக பார்க்கக் கூடாது.
2021 க்கும் 2023 க்குமான காலத்தில் 16000 புகார்கள் கிடைக்கப்பெற்றதாக, கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது. தாமதமாக வழங்கப்படும் சம்பளம், தங்கும் இடங்களில் இடர்பாடுகள், வேலை அளிப்பவரால் இடர்பாடுகள் போன்ற புகார்கள் வந்துள்ளன. இதே போல 2022 & 2023 ஆண்டுகளில் 1400 தொழிலாளர்கள் குவைத் நாட்டில் இறந்துபோனதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாயும், கடுமையாக ஊனமுற்றவர்களுக்கு ஐம்பது இலட்ச ரூபாயும் இழப்பீடாக தர வேண்டுமென ஏஐடியுசி கோருகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கொள்கை வேண்டும் எனவும், புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் ஏஐடியுசி கோருகிறது.
2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து ஏஐடியுசி அறிக்கை
மக்களை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியலை நிராகரித்து , அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க உறுதியான நிலையெடுத்த மக்களை ஏஐடியுசி பாராட்டுகிறது.
இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த கருமேகங்களை சாதாரண உழைக்கும் மக்கள் அகற்றி உள்ளனர்.
உலகெங்கும் இருந்து கலாச்சாரத்தையும், பாரம்பரியங்களையும் உள்வாங்கிய, நமது பழைய சிந்து சமவெளி நாகரிகத்திற்கு ஏற்பட இருந்த பேரழிவில் இருந்து நாடு காப்பற்றப்பட்டுள்ளது. சர்வாதிகாரத்தின் ஆபத்தில் இருந்தும் வெறுப்புக் கலாசாரத்தில் இருந்தும், பிளவுபடுத்தும் சதிச்செயல்களில் இருந்தும் தமது தாய்நாட்டை மக்கள் காப்பாற்றி உள்ளனர்.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையான விழுமியங்களான மதச்சார்பற்ற ஜனநாயகம், எதிர்க்கருத்திற்கான உரிமை, பேச்சுரிமை, அனைத்து மதங்களையும், மொழிகளையும், கலாச்சாரத்தையும் காப்பாற்ற வாக்களித்து உள்ளனர். சர்வாதிகாரிகளை எதிர்க்கவும், வீழ்த்தவும் முடியும் என்கிற மக்களின் நம்பிக்கை அதிகரித்து உள்ளது.
தொழிலாளர்கள் – விவசாயிகளின் பிரச்சினைகள், இளைஞர்களுக்கு வேலையின்மை, கல்வி பெறும் உரிமை, எளிய மக்களின் அடிப்படை உரிமைகளான குடியிருப்பு, குடிநீர், சுகாதார வசதி, பெண்களுக்கான நீதி -கண்ணியம் போன்ற முக்கியமான பிரச்சினைகளை தவிர்க்க மோடி அரசு மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன. பிளவுபடுத்தும் பேச்சுக்கள், பொய்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அரசு இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்தியும், அடியாள் பலம் , பண பலம் மூலமாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்த்து, தங்களுக்கு இசைவான அரசுகளை நிறுவும் மோடி அரசின் தந்திரங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுத்துறைகளையும் அரசுத்துறைகளையும் பாதுகாப்பது, தொழிலாளர் விவசாயிகளுக்கு இடையில் ஒற்றுமையை பலப்படுத்துவது, முறைசாரா தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது, வேலை வாய்ப்பை உருவாக்குவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது, பழைய ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளுக்கான போராட்டங்களை தீவிரமாக நடத்தி, உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என ஏஐடியுசி தொழிலாளர் வர்க்கத்தைக் கேட்டுக் கொளகிறது. அதாவது ஆகஸ்டு 2022 ல் நடைபெற்ற விவசாயிகள்- தொழிலாளர் மாநாட்டுத் தீர்மானங்களுக்காக தொடர்ந்து வெற்றி பெறும் வரை போராட வேண்டும்.
ஒன்றுபட்ட தொழிற்சங்க இயக்கம் இதில் தீர்மானமான பங்காற்றியுள்ளது. நாட்டின் நலன், மக்கள் நலன் மேம்பட ஒன்று பட்ட தொழிலாளர், விவசாயிகள் இயக்கம் மேலும் வலுப்பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.